மனிதக் கடத்தல் ஏன் நடக்கிறது... தடுப்பது எப்படி?

35 Views
Editor: 0

இந்தியாவைப் பொறுத்தவரை 90 சதவிகித கடத்தல் உள்நாட்டிலேயே நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும், உலகளவில், சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடத்துபவர்களுக்கு ஈட்டித்தரும் மிகப்பெரும் லாபகரமான தொழிலாக இது விளங்குகிறது..

மனிதக் கடத்தல் ஏன் நடக்கிறது... தடுப்பது எப்படி?

இந்தியாவைப் பொறுத்தவரை 90 சதவிகித கடத்தல் உள்நாட்டிலேயே நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும், உலகளவில், சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடத்துபவர்களுக்கு ஈட்டித்தரும் மிகப்பெரும் லாபகரமான தொழிலாக இது விளங்குகிறது.

மனிதக் கடத்தல் என்பது திட்டமிட்டு ஒழுங்கமைத்து செய்யப்படும் ஒரு குற்றம். சட்டவிரோதமாகச் செய்யப்படும் போதைப்பொருள் வர்த்தகத்துக்குப் பின் உலகின் இரண்டாவது மிகப்பெரிய குற்றத்தொழிலாகக் கருதப்படுகிறது. இது நவீன அடிமைத்தனத்தின் ஒரு வடிவம். உலகளவில், வருடந்தோறும் 1.2 மில்லியன் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். இந்தியா மனித கடத்தலில் அனைத்து நிலைகளிலும் முக்கியத்துவம் வகிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 90 சதவிகித கடத்தல் உள்நாட்டிலேயே நடைபெறுகிறது.

ஒவ்வோர் ஆண்டும், உலகளவில் சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடத்துபவர்களுக்கு ஈட்டித்தரும் மிகப்பெரும் லாபகரமான தொழிலாக விளங்குகிறது இது. முன்னெப்போதையும்விட கடத்தப்படுபவர்கள் அல்லது அடிமைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கிறார்கள் என்பது அதிர்ச்சிதரக்கூடிய தகவல். 1850-ல் ஒரு அடிமையின் விலை தற்போதுள்ள மதிப்பில் சுமார் 40,000 அமெரிக்க டாலர்கள். ஆனால், தற்போது அடிமைகளின் விலை வெறும் 90 டாலர்கள் மட்டுமே.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 21(1) மனிதக் கடத்தலை முற்றிலுமாக வெளிப்படையாகத் தடை செய்கிறது. கடத்தப்படுவதற்கு எதிராக ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். இருந்தபோதிலும், ஒரு விரிவான வரையறை 2013-ம் ஆண்டு இயற்றப்பட்ட குற்றவியல் திருத்த சட்டத்தில் பிரிவு 370-ல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370-ன் படி மனித கடத்தலுக்கான வரையறை

1. யார் ஒருவரையும் சுரண்டும் நோக்கத்துக்காக.

2. ஆட்களை சேர்ப்பது (Recruit).

3. அழைத்துச் செல்வது (Transport).

4. அடைக்கலம் கொடுப்பது (harbour).

5. இடம் மாற்றுவது (transfer).

6. ஒரு நபர் அல்லது நபர்களை பெறுவது (Receive).

சென்னையில் 3 வயதுக் குழந்தைக் கடத்தல்!

சென்னையில் 3 வயதுக் குழந்தைக் கடத்தல்!

மனிதக்கடத்தலின் வடிவங்கள்/ நோக்கங்கள்

இந்தியாவில் நடைபெறும் மனிதக்கடத்தலை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

· பாலியல் ரீதியான சுரண்டல்/வணிக ரீதியான பாலியல் சுரண்டல்.

· கட்டாய வேலை மற்றும் கொத்தடிமைத் தொழில்.

· பிச்சை எடுத்தல்.

· உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை.

· கட்டாயத் திருமணம்.

· தத்து எடுத்தல்.

· வாடகைத்தாய்.

· பொழுதுபோக்கு - நடனக்குழுக்கள்/நடன விடுதிகள்.

· மதமாற்ற/தொண்டு நிறுவன இல்லங்கள் நிரப்புதல்.

· போதைப்பொருள் கடத்தல்.

· விளையாட்டுகளில் பங்கேற்க - ஒட்டகப் பந்தயம்.

தேசியக் குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள்

இந்தியாவில், இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code - IPC) சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்களின் (Special and Local Laws– SLL) கீழ்பதியப்படும் புகார்களின் தரவுகளைச் சேகரித்துத் தொகுக்கும் பணியை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் செய்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளின் தரவுகளை ஆய்வு செய்யும்போது, 2013-ம் ஆண்டைவிட 39 சதவிகித வழக்குகள் கூடுதலாக 2014-ம் ஆண்டில் பதியப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டில், முந்தைய ஆண்டைவிட கூடுதலாக 26 சதவிகித வழக்குகளும், 2016-ம் ஆண்டில், கூடுதலாக 21 சதவிகித வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. மாறாக 2017-ம் ஆண்டில், முந்தைய ஆண்டைவிட 65 சதவிகிதம் குறைவாகவும், 2018 -ல் 14 சதவிகிதம் குறைவாகவும் வழக்குகள் பதிவாகி உள்ளன.

வழக்குகளின் எண்ணிக்கைவழக்குகளின் எண்ணிக்கை

 

மூன்றாண்டுகளின் சராசரியை ஆய்வு செய்தால், கடத்தப்பட்டவர்களில் 56 சதவிகிதம் பேர் குழந்தைகள் மற்றும் 37 சதவிகிதம் பேர் பெண்கள். கடத்தலுக்கான காரணங்களை ஆய்வுசெய்தால், கட்டாய வேலைக்காக 31 சதவிகிதம் பேரும் பாலியல்/சுரண்டல்/ஆபாச படங்களுக்காக 32 சதவிகிதமும், கட்டாயத் திருமணம், வீட்டு வேலை, பிச்சை எடுத்தல், சிறு குற்றங்களில் ஈடுபடுத்த, உடல் உறுப்பு மாற்றம்செய்ய... போன்ற பல காரணங்களுக்காக 8 சதவிகிதமும் மற்ற காரணங்களுக்காக 29 சதவிகிதமும் கடத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாடு, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் பதியப்படும் வழக்குகளின் அடிப்படையில், 2016-ம் ஆண்டு 6.1% பங்களிப்புடன் ஏழாம் இடத்திலும், 2017-ம் ஆண்டு 8.4% பங்களிப்பு மற்றும் 2018-ம் ஆண்டு 9.8% பங்களிப்புடன் நான்காம் இடத்தில் தொடர்கிறது.

கடத்தல்காரர்கள் பொதுவாக ரயில் போக்குவரத்தை, சுலபமாக செலவு குறைவாக மற்றும் பாதுகாப்பாக இருப்பதால் அதிகம் பயன்படுத்துகின்றனர். கடத்தல்காரர்கள், காவல்துறையினரிடம் சிக்கினாலும் வழக்குகள் பதியப்படுவதில்லை. உதாரணமாக ஒவ்வோர் ஆண்டும், சென்னை எக்மோர், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் போன்ற முக்கிய ரயில்நிலையங்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மீட்கப்படுகின்றனர். இவர்களில் வீட்டைவிட்டு ஓடிவந்த குழந்தைகளும் கடத்தப்படும் குழந்தைகளும் உள்ளனர். GRP / RPF அலுவலர்கள் தினசரி குறிப்பேட்டில் பதிவது (DD entry) / மெமோ போடுவது போன்ற பணிகளைச் செய்கிறார்கள். ஆனால், 2017 மற்றும் 2018-ம் ஆண்டு ஒரு வழக்குகூட GRP-யால் பதியப்படவில்லை.

குழந்தை கடத்தல்

குழந்தை கடத்தல்

மாதிரிப்படம்:

மே மாதம் 2019-ம் ஆண்டு ஒரு நிகழ்வில் பேசிய தெற்கு ரயில்வே ரயில்வே காவல் படையின் முதன்மை பாதுகாப்பு ஆணையர் பீரேந்திரகுமார், 2016-ம் ஆண்டு மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 454 ஆகவும், 2017-ம் ஆண்டில் 905 ஆகவும், 2018-ம் ஆண்டு 1,063 ஆகவும் உள்ளது; மேலும் ஏப்ரல் 2019 வரை 683 குழந்தைகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். கவனிக்க வேண்டியது என்னவென்றால் இவர்களில் பெரும்பாலோனோர் கடத்தப்பட்ட குழந்தைகள் என்று அவர் கூறியதுதான். குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்கதையாக இருப்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

மனித கடத்தல் வழக்குகள் பதியப்படாமல் இருப்பதற்கு காரணங்கள்:

வழக்குகளைப் பதிவு செய்வதில் காவல்துறையினர் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். நிறைய நடைமுறைச் சிக்கல்களும் மாறுபட்ட கருத்தாக்கங்களும், உரிமை சார்ந்த புரிதலின்மையும் மிகப்பெரிய சவாலாக உள்ளன.

தற்போதுள்ள சட்டங்களின்படி, இந்தியாவில் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஆபத்தில்லா தொழில்களில் ஈடுபட தடை ஏதுமில்லை. மேலும், அனைத்து குழந்தைகளும் பெற்றோர்கள் சம்மதத்தில் அல்லது சுய சம்மதத்தின் பேரில் அழைத்து வரப்படுகிறார்கள். கடத்துபவர்கள் தங்களைக் குழந்தைகளின் உறவினர் என அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். சம்மதத்தின் பேரில் வருவதால் வழக்கு பதிவு செய்ய இயலாது என மறுக்கப்படுகிறது. ஆனால், சட்டத்தின் விளக்கம் 2-ல் மிகத்தெளிவாகக் கடத்தல் குற்றத்தை நிர்ணயிப்பதில் பாதிக்கப்பட்டவரின் சம்மதம் ஒரு பொருட்டாகாது எனக் கூறப்பட்டுள்ளது.

 கடத்தல்

கடத்தல்

Representational Image

கடத்தப்படுபவர்கள், தங்களது சொந்த ஊரில் உணவுக்கு வழியில்லாமல் வேலை தேடி வருகின்றனர். இவர்களை மீட்டுத் திருப்பி அனுப்பினால் வேறு இடங்களுக்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அது இதைவிட மோசமான சூழலாக இருக்கலாம். அவர்களை புகார் பதியாமல் விட்டுவிட்டால், குறைந்தபட்சம் உணவாவது கிடைக்கும் அதையும் கெடுக்கக் கூடாது என்ற பரிதாப உணர்வு காரணமாக விட்டுவிடுகிறார்கள். அவர்களுடைய கடமை கடத்தலில் இருந்து அவர்களைப் பாதுகாப்பது என்பதை மறந்துவிடுகிறார்கள்.

வெளிமாநிலங்களில் இருந்து கடத்தப்படும் நபர்கள் பல்வேறு கை மாறி வருகிறார்கள். கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் பல்வேறு மாநிலங்களிலும் இருப்பதால் அந்தக் குற்ற இணைப்பில் உள்ள அனைவரையும் இனம் கண்டுபிடித்து புகார் பதிவதில் நிறைய சவால்களும், பிரச்னைகளும் உள்ளன. ஒரு வழக்கிற்கு மூன்று நான்கு மாநிலங்களைத் தொடர்புகொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.

கடத்தல் வழக்குகளை மாநிலங்களுக்கு இடையே கையாளவும், ஒருங்கிணைக்கவும் தேசிய அளவில் அமைப்புகள் ஏதுமில்லை. மட்டுமல்லாமல் மாநிலங்களில் இதற்கென்று அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இதனால் வழக்குகளைப் பதிந்து தொடர்ந்து எடுத்துச் செல்வதில் காலதாமதம் அதிகமாக ஆகிறது. இது அந்த அதிகாரிக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கும்.

பாதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊருக்கு /மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் வழக்கு விசாரணைக்கு அழைத்து வருவதில் சிக்கல்கள் உள்ளன. மேலும், ஆண்டுக்கணக்கில் வழக்கு நடந்து தீர்ப்பு தாமதமாகவே கிடைக்கிறது. காவல்துறையினர், கடத்தல்காரர்களைத் தண்டிக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்தாலும், சாட்சிகளும்/பாதிக்கப்பட்டவர்களும் பல்டி அடிப்பதும், சமரசம் அல்லது மிரட்டலால் பின்வாங்குவதும் நடக்கிறது. வேறு மாநிலங்களில் உள்ளவர்களுக்கு இங்கிருந்து கொண்டு பாதுகாப்பு வழங்க இயலாத சூழ்நிலை உள்ளது.

கடத்தும் நபர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு விடுவதும் உண்டு. மேலும், உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அழுத்தமும் புகார் பதிவு செய்வதைத் தடுக்கிறது.

கடத்தல் நடப்பது அனைவருக்கும் தெரிந்தே நடக்கிறது. இதனால் மீளாய்வு செய்யும் உயரதிகாரிகள், மீட்கப்பட்ட குழந்தைகளில் எத்தனை பேர் கடத்தப்பட்டவர்கள், எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்ற குறைந்தபட்ச கேள்வியைக் கூட கேட்பதில்லை. மேலும் வேண்டுமென்றே வழக்கு பதிவுசெய்யாமல் விடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

காவல்நிலையங்களில் அலுவலர்கள் பணியமர்த்தப்படவில்லை. நிறைய பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. இந்த சூழலில் புகார்களை பதிவு செய்தால் கூடுதல் பணிச்சுமை ஏற்படும் என்ற எண்ணம் இருக்கிறது.

கைது நடவடிக்கை

கைது நடவடிக்கை

குழந்தைகள் நலக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சைல்டுலைன் போன்ற அமைப்புகளுக்கு போதிய விழிப்புணர்வு அல்லது காவல்துறையிடம் செல்வாக்கு / அதிகாரம் இல்லை. குழந்தைகள் நலக்குழு முன்பாக மீட்கப்பட்ட குழந்தைகளை ஒப்படைக்கும்போது, அக்குழந்தையிடம் முழுமையாக விசாரித்து கொத்தடிமைத்தனம், கட்டாயவேலை, பாலியல் துன்புறுத்தல் போன்ற விஷயங்களில் தொடர்பு உள்ளதா என்று கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக விசாரணை முறையாக நடத்தப்பட்டு பதிவு செய்யப்படுவதில்லை. குழந்தைகளைப் பெற்றோரிடம் நேரடியாக ஒப்படைப்பதைத் தவிர்த்து சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் நலகுழுவுக்கு அனுப்பி சமூக விசாரணை அறிக்கை (Social Investigation Report) யின் முடிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இது பின்பற்றப்படுவதில்லை. மேலும் காவல் துறையினருக்கு புகார் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்டவரின் பெற்றோர்/குழந்தையோ முன்பணம் பெற்றிருந்தால் வருவாய் கோட்டாட்சியரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் எதுவும் செயல்படுவது போல் தெரியவில்லை. பெயரளவுக்கு கூட்டங்கள் நடத்தி தங்கள் கடமையை முடித்துக் கொள்கிறார்கள்.

கடத்தல்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை - தண்டனை, வங்கிக்கணக்கை முடக்குவது உறுதி செய்யப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நேரத்தில் நீதி வழங்குவது மிகவும் முக்கியம். தண்டனை விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும், அதற்காக விரைவு நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும்.

வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் வழக்கு விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடு உறுதி செய்யப்பட வேண்டும்.

உயர் அதிகாரிகளால் அவ்வப்போது வழக்குகளை மீளாய்வு செய்வது உறுதி செய்யப்பட வேண்டும். மேலும் புகார்களை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காத / பதிவுசெய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும்.

வேலைக்கு ஆட்களை எடுக்கும் முகவர்கள் தங்கள் நிறுவனங்களைப் பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். இது முகவர்கள் ஏமாற்றுவதையும் சுரண்டுவதையும் தடுக்கும்.

child

கடத்தல் சம்பவங்கள் முறையாகப் பதியப்படாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது. பாதிக்கப்பட்டவர்களைச் சுரண்டுவதற்கு கடத்தல்காரர்களுக்கு வழிவகுக்கும். மேலும், கடத்தலுக்கு காரணமான முக்கிய காரணிகளில் வறுமையும் பேரிடரும் பெரும்பங்கு வகிக்கின்றன. Covid-19 ஏற்படுத்திய பொருளாதாரதாக்கத்தால், பல ஏழைக்குடும்பங்கள் கடுமையான வறுமைச்சூழலுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது கடத்தல்காரர்கள், பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகளை கொத்தடிமை, கட்டாய உழைப்பு, பாலியல் சுரண்டல் போன்றவற்றில் ஈடுபடுத்த ஊக்குவிக்கும். எனவே, தற்போதைய சூழலில், மனிதக் கடத்தலை தடுக்க ஒரு வலுவான மற்றும் விரிவான சட்டம் தேவை.