புதுடெல்லி
உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் 5 லட்சத்துக்கு மேலாக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு இதுவரை மருந்தோ,தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை நாம் எவ்வளவு காலம் கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டும்? பயனுள்ள மருந்து அல்லது தடுப்பூசி எப்போது கிடைக்கும்? இது தான் அனைவரின் மனதிலும் எழும் கேள்வியாக உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,தகவல்படி ஜூன் 28 நிலவரப்படி, உலகளவில் 148 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நடந்து வருகின்றன. இவற்றில், 131 தடுப்பூசிகள் முன் மருத்துவ சோதனை செயல்பாட்டில் உள்ளன, மீதமுள்ள 17 தடுப்பூசிகள் மனிதர்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டத்திற்கு வந்துள்ளன.
உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் கொரோனா தொற்றுநோயைச் சமாளிக்க கோடிகணக்கான பணம் செலவிடுகின்றன. இந்தியாவிலும், பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து தடுப்பூசிக்கு ரூ .100 கோடி செலவிடப்படுகிறது.
அதே நேரத்தில், கொரோனாவுக்கு பயனுள்ள சிகிச்சை மற்றும் தடுப்பூசிக்கு, அடுத்த 12 மாதங்களில் 31 பில்லியன் டாலர் (சுமார் 2.35 லட்சம் கோடி ரூபாய்) தேவைப்படும் என்றும் ஐ.நா கூறியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில், பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஒரு பயனுள்ள கொரோனா தடுப்பூசி தயாரிக்க முடிந்தால், அதன் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு 25 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 1.90 லட்சம் கோடி) தேவைப்படும் என்று மதிப்பிட்டுள்ளது.
எந்தவொரு நோய்க்கும் தடுப்பூசி கண்டுபிடிக்க பொதுவாக 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால், உலகளவில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டும் என விரைவான பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது ஜூன் 2021 க்குள் ஒரு நல்ல தடுப்பூசி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இங்கிலாதின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அங்குள்ள அஸ்ட்ராஜெனெகா என்ற நிறுவனம் ஒரு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளே முன்னணியில் உள்ளன, இந்த தடுப்பூசி மனித பரிசோதனையின் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த தடுப்பூசியை தயாரிக்க அஸ்ட்ராசெனெகா பல நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. அதில் இந்தியாவின் சீரம் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனங்களின் உதவியுடன், 2021 ஜூன் மாதத்திற்குள் 20 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க விரும்புகிறது.
இந்த மாத தொடக்கத்தில், சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் சிங் இந்தியாவில் 14 கொரோனா தடுப்பூசிகள் மீது பணிகள் நடந்து வருவதாக தெரிவித்திருந்தார். இதில் 4 தடுப்பூசிகளின் பணிகள் அடுத்த 3 முதல் 5 மாதங்களில் மருத்துவ பரிசோதனைகளின் கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவாக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த மனித பரிசோதனையை இந்தியா ஜூலை மாதம் நடத்த உள்ளது.
இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாரத் பயோடெக்கின் தடுப்பூசிக்கு மருத்துவ மனித சோதனைகளின் கட்டம் 1 மற்றும் 2 ஐ நடத்த அனுமதித்துள்ளனர்.
பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த தடுப்பூசி நிரூபிக்கிறது என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி கோவாக்சின் என்று அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பாரத் பயோடெக் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எலா தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தையும் தவிர, உலகில் செயல்பட்டு வரும் 148 தடுப்பூசிகளில் 5 இந்திய நிறுவனங்களிடமிருந்தோ அல்லது இந்திய நிறுவனங்களின் பங்களிப்பில் முயற்சியிலோ நடந்து வருகிறது. இதில் குஜராத்தின் ஜைடஸ் காடிலா நிறுவனமும் உள்ளது. அதே நிறுவனம் 2010 இல் நாட்டில் பன்றிக்காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசியை தயாரித்தது.
கூடுதலாக, பாரத் பயோடெக் மற்ற நோய்த்தடுப்பு மருந்துகள், இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் சேர்ந்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டால் இந்த தடுப்பூசியை முதலில் உருவாக்கும் நாடு, அங்குள்ளவர்களுக்கு தான் முதலில் தடுப்பூசி கிடைக்கும்.