முகேஷ் அம்பானி
12 நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்ததன் விளைவாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடன் இல்லாத நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு முதலீட்டாளர்களும் பங்குதாரர்களும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் ஜியோவின் 0.39% பங்குகளை வாங்க, இன்டெல் கேப்பிட்டல் நிறுவனம் ரூ.1,894.50 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் குழுமம் இன்று அறிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்யவுள்ள 12வது நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களில் ரிலையன்ஸ் ஜியோ மொத்தம் ரூ.1,17,588.45 கோடியை திரட்டியுள்ளது. உலகில் ஒரு நிறுவனம் திரட்டிய மிகப்பெரிய தொடர்ச்சியான நிதியில், இதுவே மிகப்பெரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. கடந்த 11 வாரங்களில் மட்டும் ஜியோவில் மொத்தம் 12 நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. இந்த 12 நிறுவனங்களுக்கும் சேர்த்து, ஜியோவின் 25.09 பங்குகளை விற்பனை செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதியன்று ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.43,574 கோடிக்கு 9.99% பங்குகளை வாங்கியது. அதன்பின் மே 3-ம் தேதியன்று சில்வர் லேக் நிறுவனம் ரூ.5,656 கோடிக்கு 1.15% பங்குகளை வாங்கியது. மே 8-ம் தேதியன்று விஸ்டா நிறுவனம் ரூ.11,367 கோடி முதலீட்டில் 2.32% பங்குகளை வாங்கியது. அதைத்தொடர்ந்து மே 17-ம் தேதியன்று ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் ரூ.6,598 கோடி முதலீட்டில் 1.34% பங்குகளை வாங்கியது.
மே 22-ம் தேதியன்று கேகேஆர் நிறுவனம் ரூ.11,367 கோடி முதலீட்டில் 2.32% பங்குகளை வாங்கியது. ஜூன் 5-ம் தேதியன்று அபுதாபியை சேர்ந்த முபாதலா நிறுவனம் ரூ.9,093 கோடி முதலீட்டில் 1.85% பங்குகளை வாங்கியது. ஜூன் 5-ம் தேதின்று சில்வர் லேக் நிறுவனம் மீண்டும் ரூ.4,547 கோடி முதலீட்டில் 0.93% பங்குகளை வாங்கியது.
ஜூன் 7-ம் தேதியன்று அபுதாபி முதலீட்டு ஆணையம் ரூ.5,683.5 கோடி முதலீட்டில் 1.16% பங்குகளை வாங்கியது. ஜூன் 13-ம் தேதியன்று டிபிஜி கேபிடல் நிறுவனம் ரூ.4,546.8 கோடி முதலீட்டில் 0.93% பங்குகளை வாங்கியது. ஜூன் 13-ம் தேதியன்று எல் கேட்டெர்டன் நிறுவனம் ரூ.1,894.5 கோடி முதலீட்டில் 0.39% பங்குகளை வாங்கியது. ஜூன் 18-ம் தேதியன்று சவுதி அரேபியாவை சேர்ந்த பிஐஎஃப் நிறுவனம் ரூ.11,367 கோடி முதலீட்டில் 2.32% பங்குகளை வாங்கியது. அதைத்தொடர்ந்து, இன்று (03.07.2020) இண்டெல் கேபிடல் நிறுவனம் ரூ.1,894.5 கோடி முதலீட்டில் 0.39% பங்குகளை வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 1% உயர்ந்துள்ளது.
``இந்தியாவை உலகின் முன்னணி டிஜிட்டல் சமூகமாக மாற்றுவதன் முயற்சியின் ஒரு பங்காக இன்டேல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது பெரும் மகிழ்சியளிக்கிறது. இன்டேல், உளகளவில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப புதுமைகளை உருவாக்குவதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. மேலும், இந்நிறுவனம் உலகளவில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது. இந்த முதலீட்டு இணைப்பானது ஜியோவிற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் பயனளிக்கும். நமது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் மேம்படுத்துவதற்கும், 1.3 பில்லியன் இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் அதிநவீன தொழில்நுட்பங்களில் இந்தியாவின் திறன்களை முன்னேற்றுவதற்காக இன்டெல்லுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார் முகேஷ் அம்பானி .
12 நிறுவனங்களின் முதலீட்டை ஈர்த்ததன் விளைவாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடன் இல்லாத நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு முதலீட்டாளர்களும் பங்குதாரர்களும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார்.