நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், அவற்றின்கீழ் இயக்கும் கல்லூரிகளின் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி பருவத் தேர்வை நடத்திட, மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது.
கொரோனா அச்சத்தின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும், கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடத்தப்படாமல் உள்ளன.
அதேசமயம், இனிமேல் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி பருவத் தேர்வுகள் நடத்தப்படுமா, அப்படி நடத்தப்படாதபட்சத்தில், எதனடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்பன போன்ற பல்வேறு கேள்விகள் பெற்றோர் மத்தியில் இருந்து வருகிறது.
இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய உயர் கல்வித் துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், "பல்கலைக்கழகங்கள், கல்லூரி மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வழிகாட்டுதலின்படி, ஆண்டு இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எனவே, இத்தேர்வுகளை நடத்த அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ரத்து?
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, உயர் கல்வி நிறுவனங்கள் ஆண்டு இறுதித் தேர்வை நடத்த வேண்டும்" என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவது குறித்து நிபுணர் குழு அளித்த பரிந்துரையில், ""கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, தற்போது தேர்வுகளை நடத்தினால் அது மாணவர்களுக்கு சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வை ரத்து செய்யலாம்.
முந்தைய ஆண்டு பருவத் தேர்வுகளில் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களின் தேர்ச்சியை பல்கலைக்கழக நிர்வாகங்கள் முடிவு செய்து கொள்ளலாம். அதேசமயம், தங்களது பல்கலைக்கழக நிர்வாகம் இப்படியொரு முடிவெடுத்தால், அந்த முடிவில் உடன்பாடில்லாத மாணவர்களுக்கு மட்டும் அதுகுறித்த தங்களின் ஆட்சேபத்தை தெரிவிக்கலாம்" என கெரிவித்திருந்தது.