BREAKING | தனியார் பள்ளிகள் 40% கல்விக்கட்டணத்தை முதற்கட்டமாக வசூலிக்கலாம் - உயர் நீதிமன்றம்

52 Views
Editor: 0

பாட புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைவான கட்டணத்திலோ வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளதாவது, ”அனைவரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் நீதிமன்றம் உடனே உத்தரவு பிறப்பிக்க முடியாது.

பெரும்பாலான பெற்றோர்கள் வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்து வந்தாலும், ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை அரசுகள் எதிர்கொள்கிறது.

இதன் தாக்கம் எப்போது குறையும் தெரியாத நிலையில் உள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது. பள்ளிகளுக்கான கட்டணத்தில் 75 % கட்டணத்தை வசூலிக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது.

இரண்டாம் தவணை 25%-ஐ பள்ளிகள் திறக்கும்போது வசூலிக்கலாம் என சொல்லும் நிலையில், எப்போது திறக்கும் என தெரியாத நிலையில் உள்ளது. அதனால், 2020-21 முதல் தவணையாக 40% கட்டணம் வசூலிக்கலாம்.

இந்த உத்தரவு அரசு உதவிபெறாத அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். பாட புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைவான கட்டணத்திலோ வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்” என்று கூறிய நீதிபதி இந்த வழக்கை அக்டோபர் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

உலகச்செய்திகள்