மாஸ்கோ
ரஷியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7.71 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று 6,109 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், ரஷியாவில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 771,546 ஆக உயர்ந்துள்ளதாக நாட்டின் கொரோனா மறுமொழி மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூலை 12 அன்று, ரஷியாவின் செச்செனோவ் பல்கலைக்கழகம், கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்ததாகக் கூறியது, இது அரசால் இயங்கும் கமலே இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமியாலஜி அண்ட் மைக்ரோபயாலஜி உருவாக்கியது.
யுனைடெட் கோ ருசால் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுக்கும், கோடீஸ்வர அதிபர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட நோய்த்தடுப்பு ஊசிகளை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கமலே மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் முன்னதாக, தடுப்பூசி அடுத்த மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்புவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் தனியார் நிறுவனங்கள் பெருமளவில் உற்பத்தியைத் தொடங்கலாம் என்றும் கூறினார்.
சோதனைத் தடுப்பூசி ரஷ்ய உயரடுக்கினருக்கு வழங்கிய தன்னார்வத் திட்டம் சட்டபூர்வமானது, இருப்பினும், பங்கேற்பாளர்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக இது ரகசியமாக செய்யப்பட்டுள்ளது என்று அந்த முயற்சியை நன்கு அறிந்த ஒரு ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.