வாஷிங்டன்: மெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசாரத்தை, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இணையத்தில் பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில், நவம்பரில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், டிரம்பின் பிரசார குழுவில் இடம் பெற்றுள்ள அல் மாசோன் கூறியதாவவது:அதிபர் டிரம்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான, 'ஹிந்துஸ் பார் டிரம்ப்' என்ற பிரசார கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று முன்தினம் நடந்தது.
இதை, அமெரிக்காவில் வசிக்கும், 30 ஆயிரம் இந்தியர்கள் நேரடி ஒளிபரப்பில் பார்த்து, தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். நேரடி ஒளிபரப்பு முடிந்த அடுத்த சில மணி நேரங்களில், 'ஆன்லைன்' வாயிலாக, 70 ஆயிரம் இந்தியர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து, தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.கடந்த, 1992லிருந்து, ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அளித்து வரும் ஏராளமான அமெரிக்க இந்தியர்கள், சமீப காலமாக, குடியரசு கட்சி பக்கம் பார்வையை திருப்பியுள்ளனர். இந்தியாவுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவிக்கும் ஆதரவின் காரணமாகவும், இதற்கு முன் இல்லாத வகையில், இந்தியா - அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான நட்பு அதிகரித்துள்ளதன் காரணமாகவும், இந்தியர்களின் கவனம், டிரம்பை நோக்கி திரும்பியுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.