பாக்., கடற்படைக்கு சீனாவின் அதிநவீன போர்க்கப்பல் தயார்:
பீஜிங் : பாகிஸ்தான் கடற்படைக்காக, சீனா தயாரித்து வரும், நான்கு அதிநவீன போர்க் கப்பல்களில், முதல் கப்பல் தயாராகி உள்ளது. அதன் துவக்க விழா, சீனாவில் நேற்று முன் தினம், நடைபெற்றது.
சீனாவின் அதிநவீன, 'டைப் -- 054 பிரிகேட்ஸ்' ரக போர் கப்பல்களை வாங்க, அந்நாட்டின் கப்பல் கட்டுமான வர்த்தக நிறுவனத்துடன், 2017ல், பாகிஸ்தான் ஒப்பந்தம் போட்டது.இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர், வாங் யி மற்றும் பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர், ஷா மெஹ்மூத் குரேஷி, ஆகியோர், கடந்த 21ல், சீனாவில் சந்தித்து, இரண்டாம் கட்ட பேச்சு நடத்தினர்.
இதையடுத்து, சீனா தயார் செய்து வரும், நான்கு போர்க்கப்பல்களில், முதலாவது கப்பல் தயார் நிலையில் இருப்பதாக, சீனா அறிவித்தது.இந்த போர்க்கப்பலின் அதிகாரப்பூர்வ துவக்க விழா, சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள, ஹூடாங் ஸோன்குவா கப்பல் தளத்தில், நேற்று முன் தினம், நடைபெற்றது.சீனா -- பாக்., இடையிலான, ராணுவ உறவில், புதிய அத்தியாயம் துவங்கி இருப்பதாக, பாக்., ஊடகங்களில், செய்திகள் வெளியாகி உள்ளன.