'குழந்தைகள், இளம் வயதினருக்கு கொரோனா பாதிப்பு குறைவு': ஆய்வில் தகவல்:
லண்டன்: 'பெரியவர்களை விட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்படுவது மற்றும் உயிரிழப்பது மிகவும் குறைவு தான்' என, இங்கிலாந்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் லிவர்பூல், எடின்பர்க் பல்கலைக்கழக மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு, கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடைய 651 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தியது.
ஆய்வு குறித்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், குழந்தை மருத்துவ நிபுணர் கலாம் செம்பிள் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா பாதிப்பால் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைவாக உள்ளது. 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் இறந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை 6 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் அதே காலகட்டத்தில் சுமார் 18,000 வயதானவர்கள் தொற்றால் இறந்துள்ளனர்.
இறந்த மூன்று குழந்தைகள் புதிதாக பிறந்த குழந்தைகள். மேலும் அவர்களுக்கு வேறு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளும் இருந்தது. மற்ற மூன்று குழந்தைகள் 15 முதல் 18 வயதுடையவர்கள். அவர்களுக்கும் வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.