மாநகராட்சிகளில் இன்று முதல் சிறு கோவில்கள் திறக்க அனுமதி:
சென்னை: தமிழக அரசின் அனுமதியை அடுத்து, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், வழிபாட்டு தலங்கள் இன்று(ஆக.,10) முதல் திறக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
தமிழகம் முழுதும், வரும், 31ம் தேதி வரை, பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வாழ்வாதாரம் கருதி, அவ்வப்போது முதல்வர் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறார். கடந்த மாதம், ஊராட்சி பகுதிகளில், ஆண்டு வருமானம், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான, வழிபாட்டு தலங்களை திறக்க, அனுமதி அளிக்கப்பட்டது. இம்மாதம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், ஆண்டு வருமானம்,10 ஆயிரத்திற்கு குறைவான, வழிபாட்டு தலங்களை திறக்க, அரசு அனுமதி அளித்தது. எனினும், பெரிய கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், மாநகராட்சி பகுதிகளிலும், சிறியவழிபாட்டு தலங்களை, இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்க, அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள, நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், அதாவது, 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக, ஆண்டு வருமானம் உள்ள கோவில்கள்; சிறிய மசூதிகள்; சிறியதர்காக்கள்; தேவாலயங்கள் ஆகியவற்றில், மாவட்ட கலெக்டர்கள் அனுமதியுடன், இன்று முதல், பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னை மாநகராட்சி பகுதியில், இதற்கான அனுமதியை, சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் பெற வேண்டும். மற்ற மாநகராட்சி பகுதிகளில், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம், அனுமதி பெற வேண்டும். இதே போல், தமிழகம் முழுதும், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள், இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.