புதுடில்லி: நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு 3.0 ஜூலை 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்தகட்ட ஊரடங்கு தொடர்பாக வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. ஆக.,1 முதல் புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பொருளாதார பாதிப்பை கருத்தில் கொண்டு, பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வு 2.0, ஜூலை 31 வரை அமலில் இருந்து வருகிறது. மூன்றாவது கட்டமாக அமலாகும் ஊரடங்கில், படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன், மேலும் சில தளர்வுகளை அரசு அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயம் என்ற நிபந்தனையுடன், வரும் ஆக.1 முதல் சினிமா திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், பள்ளிகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் உள்ளிட்டவை தொடர்ந்து மூடப்பட்டிருக்குமென கூறப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் மீண்டும் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளி கல்வி செயலாளர் அனிதா கார்வால் தலைமையிலான குழு, அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. மூன்றாவது கட்ட ஊரடங்கில் உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், சினிமா திரையரங்குகளை மீண்டும் திறக்க, உள்துறை அமைச்சகத்துக்கு முன்மொழிந்துள்ளது. இதற்கு முன்னர் சினிமா திரையரங்கு உரிமையாளர்களிடம், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. அதில் 50 சதவீத இருக்கைகளுடன் சினிமா திரையரங்குகளை திறக்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சகம், ஆரம்பத்தில் 25 சதவீத இருக்கைகள் மற்றும் அனைத்து சமூக இடைவெளி நடைமுறைகளை பின்பற்றுமாறு பரிந்துரைத்துள்ளது. இது தவிர, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் கள நிலவரங்களின் அடிப்படையில், சொந்தமாக வழிகாட்டுதல்களை உருவாக்கி கொள்ள மத்திய அரசு அதிகாரம் வழங்கலாம்.