சென்னை:
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வருகிற 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் எந்தவித தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நாளை மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் நாளை மறுநாள் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பல அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.