சென்னை: தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த தமிழகம் 2-ஆம் இடத்தில் உள்ளது.
தலைநகர் சென்னையில் முன்பு உச்சத்தில் இருந்த கொரோனா பரவல் தற்போது தணிந்துள்ளது. ஆனால், மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது.
பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று 6வது நாளாக 6 ஆயிரத்தை தாண்டி கொரோனா பதிவாகி இருக்கிறது.
ஆட்சியர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு ஊழியர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். சென்னை ஆட்சியர் சீதாலட்சுமிக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந் நிலையில் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் கிண்டி கிங் ஆய்வக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருகிறது.