சென்னை,
விவசாயிகளின் குறைகள் களையப்படும்; முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி:
தமிழக விவசாயிகளின் குறைகள் அனைத்தும் களையப்படும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல்லில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது பேசும்பொழுது, தடுப்பணை மற்றும் குடிமராமத்து பணிகளால் விளைபொருள் உற்பத்தியில் விவசாயிகள் சாதனை படைத்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். தேவைப்படும் இடங்களில் உடனடியாக தடுப்பணை அமைத்து, தண்ணீர் சேமிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் கூறினார்.
சுய உதவி குழுவினர், அரசின் நல திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மகளிர் சுய உதவி குழு நிர்வாகிகளுடனான சந்திப்பில் பேசிய அவர், கிராமப்புற பெண்களின் மேம்பாடு, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருப்பதாகவும், வளர்ந்த நாடுகளில் கூட இதுபோன்ற திட்டங்கள் இல்லை எனவும் கூறினார்.
திண்டுக்கல், மதுரை, நெல்லை மாவட்டங்களில் ஆய்வு செய்வதற்காக 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திண்டுக்கல் மாவட்டம் சென்றார். அங்குள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் சார்பில் 3,530 பேருக்கு 2 கோடியே 96 லட்சத்து 87 ஆயிரத்து 275 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து, 8 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு கட்டிடங்கள், தடுப்பணைகள், மருந்தகங்கள், மாணவர் விடுதிகளை திறந்து வைத்தார். மேலும், நீர்த்தேக்க தொட்டிகள், பள்ளி கட்டிடங்கள் ஊராட்சி அலுவலக கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.