புதுச்சேரியில் 2 அமைச்சர்களுக்கு கொரோனா…! இறைவனை வேண்டுவதாக முதலமைச்சர் டுவிட்டர்:
புதுச்சேரி: புதுச்சேரியில் 2 அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் அரசியல் பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் பாதிப்பு உயர ஆரம்பித்தது. அதிகமான பரிசோதனைகள் மூலம் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.
புதுச்சேரியில் மட்டும் இதுவரை 47, 836 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 599 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதுவரை கொரோனாவுக்கு 89 பேர் பலியாகி உள்ளனர். 5,624 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் 2,180 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 3,355 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுச்சேரியிலும் அரசியல் கட்சி பிரமுர்களை கொரோனா விட்டு வைக்க வில்லை. சில நாட்களுக்கு முன் காரைக்கால் ஆட்சியர் அர்ஜுன் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந் நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:
புதுச்சேரி அமைச்சரவையில் என்னுடைய அமைச்சர்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டுகிறேன்.
அவர்களுடன் தொடர்பில் இருந்த பொதுமக்கள், அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.