டிவி தலையில் விழுந்து 3 வயது குழந்தை பலியான பரிதாபம்:
சென்னை: சென்னை அருகே சோலையூரில், டிவி தலையில் விழுந்ததில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதிவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த சோலையூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பாலாஜி வீட்டில் டிவி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில், மொபைல்போன் வைக்கப்படுவது வழக்கம். நேற்று இரவு 7 மணியளவில், பாலாஜி மொபைல் போன் அழைப்பு வந்துள்ளது. அப்போது, மொபைல் போன் சார்ஜ் போடப்பட்டிருந்தது. அதன் வயர் டிவி அடியில் சிக்கியிருந்தது.
இதனை தெரியாத பாலாஜியின் மகன் கவியரசு(3) மொபைல்போனை எடுக்க முயற்சித்துள்ளான். அது முடியாததால், மொபைலை வேகமாக பிடித்து இழுத்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக டிவி, கவியரசு தலையில் விழுந்தது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. தொடர்ந்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர், உடனடியாக சிறுவனை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், கவியரசு ஏற்கனவே இறந்துவுிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.