நமாமி கங்கை திட்டம் போல், காவிரிக்கும் சிறப்பு திட்டம்...

48 Views
Editor: 0

நமாமி கங்கை திட்டம் போல், காவிரிக்கும் சிறப்பு திட்டம் வகுக்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை.

நமாமி கங்கை திட்டம் போல், காவிரிக்கும் சிறப்பு திட்டம் வகுக்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் நதிநீர் இணைப்பு தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு நதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிற இந்த நிலையில், தலைமை செயலகத்திலிருந்து, நதிநீர் இணைப்பு தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்குடன் காணொளி காட்சி மூலமாக ஆலோசனை கூட்டமானது தற்போது நடைபெற்று வருகிறது. காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம், குண்டாறு இணைப்பு திட்டம், கருமேனி நதிநீர் இணைப்பு திட்டம், காவிரி ஆற்றை சீரமைப்பது மற்றும் நடந்தாய் வாழி காவிரி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சரிடம் பேசி வருகிறார். மேலும் நீர் ஆதாரங்களை மேன்படுத்தும் இதுபோன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முதல்வர் முன் வைத்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தை பொறுத்தவரை நீர் ஆதாரங்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆறாயிரத்து 278 திட்டங்கள் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் தடுப்பு அணைகளும் அதிகளவில் கட்டப்பட்டு வருவதையும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென முதல்வர் பழனிசாமி மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளார். ஏனெனில், காவிரி என்பது தங்களுடைய விவசாயத்திற்கான நீராதாரமாக மட்டுமால்லாமல், குடிநீருக்கும் தேவைப்படுவதால், தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதனால் இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சகம் முழு ஒத்துழைப்பையும் நல்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் முன்வைத்துள்ளார். காவிரி-கோதாவரி திட்டத்தை பொறுத்தவரையில், அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை 'நேஷனல் வாட்டர் டெவெலப்மென்ட் ஏஜென்சியானது' மேற்கொண்டு வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 200 டி.எம்.சி தண்ணீர் வழங்கவேண்டுமென பிரதமருக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளதையும் முதல்வர் தற்போது மத்திய அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கர்நாடகாவில் சில இடங்களில் ஒப்பந்தத்தை மீறி அணை கட்டக்கூடிய முயற்சியை அம்மாநில அரசு மேற்கொண்டுவருவதாக குறிப்பிட்டுள்ள முதல்வர், அதனை தடுப்பதற்கான நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலச்செய்திகள்