“பொழுது போகல... E-PASS வேணும்!”
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்துக்கு சவாரியுடன் வந்த ஆட்டோவை வீறுகொண்டு தடுத்து நிறுத்தியது போலீஸ்.
-
கோவையைச் சேர்ந்த சீதையம்மாள் உடல்நலக்குறைவால் உயிரிழக்கிறார். சொந்த ஊரான நீலகிரி மாவட்டம், தங்காடுக்கு அவரது உடல் ஆம்புலன்ஸில் எடுத்துச்செல்லப்பட, மகன் பாபு பின்னால் காரில் செல்கிறார். இறப்புச் சான்றிதழ் இருப்பதால் ஆம்புலன்ஸ் அனுமதிக்கப்படுகிறது. இ-பாஸ் இல்லாததால் பாபுவுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ‘ஏற்கெனவே விண்ணப்பித்தும் கிடைக்காத தால்தான் வந்தேன்’ என்று எடுத்துச் சொல்லியும் `கறார்’ காட்டப்பட்டது. உறவினர்களின் சாலைமறியலும், பாபு கதறியழுத கண்ணீருமே அதிகாரிகளை அசைத்தது; அனுமதி கிடைத்தது!
-
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன், தன் கர்ப்பிணி மனைவி ரோஜாவைப் பார்க்கவும், பிரசவ நேரத்தில் உடனிருக்கவும் பலமுறை இ-பாஸுக்கு விண்ணப்பித்தார். அத்தனையும் நிராகரிக்கப்பட்டன. குறுக்குவழி தெரியாததாலும், போலி இ-பாஸ் வழங்கும் கும்பலோடு தொடர்பு இல்லாததாலும் தற்கொலை முடிவைத் தேர்ந்தெடுத்து உயிர்விட்டார்.
-
திருவள்ளூர் மாவட்டம், அன்னம்பேடு கிராமத்திலிருந்து தன் அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் மகன். ஸ்ரீபெரும்புதூர் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தி, திருப்பியனுப்புகிறார்கள் அதிகாரிகள். சமூக வலைதளங்களில் வெளியான அந்தக் காணொளியில், பெரியவர் மூச்சுக்குச் சிரமப்படுவதைப் பார்க்கும் நமக்கே நெஞ்சடைக்கிறது. ஆனால், அதிகாரிகளின் நெஞ்சு இரங்கவில்லை.
-
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்துக்கு சவாரியுடன் வந்த ஆட்டோவை வீறுகொண்டு தடுத்து நிறுத்தியது போலீஸ். இ-பாஸ் இல்லையென்று ஆட்டோவைப் பறிமுதல் செய்ததோடு அபராதம் விதித்தது. வாழ்வாதாரத்துக்கு வழியில்லாத சூழலில், கிடைத்த சவாரியும் போய், ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட நொந்துபோனார் ஆட்டோக்காரர் ஹரி. தனது ஆட்டோவிலிருந்த பெட்ரோலை எடுத்து, தன் மீது ஊற்றித் தீவைத்துக்கொண்டார். இத்தனைக்கும் அவர் வந்த தூரம் வெறும் 11 கிலோமீட்டர்!
இவையெல்லாம் `இ-பாஸ்’ எனும் வெற்றுச் சடங்கால் நடந்த சங்கடங்கள். இவற்றைப்போல இன்னும் வெளிவராத சங்கடங்கள் ஏராளம். அரசு, நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்து வதற்காகத்தான் இந்த இ-பாஸ் நடைமுறையைக் கொண்டுவந்தது. ஆனால் அது நடந்ததா என்ன?
இ-பாஸ்
சென்னையிலிருந்து மதுரைக்கு இ-பாஸ் எடுத்தும், எடுக்காமலும் சென்றவர்களால் நூற்றுக்கணக்கில் இருந்த தொற்று எண்ணிக்கை, ஆயிரக்கணக்கில் மாறி மதுரைக்கு முழு ஊரடங்கு கொண்டுவர வழிவகை செய்தது.
இத்தனை கட்டுப்பாடுகளோடு ‘நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்’ என்று `கறார்’ காட்டிக்கொண்டிருந்த கவர்மென்ட், இன்று ‘ஈஸியா எடுத்துக்கோ... எங்கே வேணா போய்க்கோ’ என்று அவிழ்த்துவிட்டிருக்கிறது.
இ-பாஸின் இன்றைய நடைமுறையை பரிசோதனை செய்ய, ‘பொழுது போகல... ஈ.சி.ஆர் வரைக்கும் போகணும்’ என்ற குறிப்புடன் ஒரு இ-பாஸ் அப்ளை செய்தேன். அப்ளை செய்த அடுத்த நொடியே ‘இந்தா வாங்கிக்கோ’ என்று இளித்துக்கொண்டு பாஸ் கொடுத்தது TN ePass இணையதளம்.
இப்படியான இ-பாஸ் நடைமுறையால் ஏதாவது பிரயோஜனமுண்டா என்றால், கணினி மையம் நடத்துபவர்களுக்கு வேண்டுமானால் உண்டு. கணினி வசதியற்ற அப்பாவி மக்கள் அருகிலுள்ள கணினி மையத்துக்குச் சென்று தங்கள் காசை இழப்பார்கள். அவ்வளவுதான்!
ஆகஸ்ட் 17, 18 ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் சென்னைக்குள் நுழைய இ-பாஸ் அப்ளை செய்த 20,671 பேருக்கும் `ஓகே’ சொல்லியிருக்கிறது ஆட்டோ ஜெனரேட்டட் சிஸ்டம். ‘அனைவருக்கும் இ-பாஸ்’ என்று முதல்வர் அறிவித்த முதல் இரண்டு நாள்களில் மட்டுமே தமிழகத்தில் 2,70,000 பேருக்கு இ-பாஸை அள்ளி வழங்கியிருக்கிறது இந்த சிஸ்டம். வாயிருந்தால் செங்கல்பட்டு டோல்கேட் 18-ம் தேதி கதறி அழுதிருக்கும். அத்தனை நெரிசல் அன்று. இரண்டு நாள்களாகச் சென்னைக்குள் நுழைந்தவர்களை ஒரு பரிசோதனையும் செய்யாமல் அனுப்பிவிட்டு, மறுநாளே ‘சென்னைக்குள் நுழைந்தவர்கள் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று அறிவித்திருக்கிறது அரசு. என்ன திடீர் ஞானோதயமோ?!
பல பேர் ரத்தம் சிந்தியும், உயிரைக் கொடுத்தும் கிடைக்காத இ.பாஸ், இப்போது ‘பொழுதுபோக்க’ கிடைக்கிறது.
எதற்காக இந்த இ-பாஸ் நாடகம்?