உள்ளாட்சி அமைப்புகளில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி - முழு விபரங்கள் உள்ளே...
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு செயல்முறை பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு 'துலிப்' (TULIP- The Urban Learning Internship Program ) என்னும் திட்டத்தை கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், ஸ்மார்ட் சிட்டியாக தேர்வான 4,400 நகரங்களிலும் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை துலிப் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதேபோல் பொது சுகாதாரம், புள்ளியியல் ஆய்வு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகராட்சி நிதி நிர்வாகம் ஆகிய 4 பிரிவுகளில் பயிற்சி பெறுவோருக்கு மாதம் ₹ 7,000 உதவித் தொகை வழங்கப்படும் எனவும் கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிப்பதற்கான மின்னஞ்சல் முகவரியையும் கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான செயல்முறைகள் மூலம் சீரமைக்க இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை துலிப் தளம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாநகராட்சியில் துலிப் திட்டத்தின் கீழ் பட்டதாரிகளுக்கு பயிற்சி வாய்ப்புகளை உதவித் தொகையுடன் அளிக்க உள்ளது. தொழில்நுட்ப உதவியாளர், குடிநீர் விநியோகம், தகவல் தொழில்நுட்பம், நகர்ப்புற வசதிகள் உள்ளிட்ட 8 பிரிவுகளில் பயிற்சி பெறுவோருக்கு மாதம் ₹ 10,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதேபோல், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும் மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளித்து அவர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்கும், தேசிய வாழ்வியல் தொழிற்பயிற்சி முறை திட்டம் துவங்கப்படவுள்ளது.
இதில் கணினி இயக்குபவர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பு உதவியாளர், குழாய் பொருத்துனர், எலக்ட்ரீசியன், பிட்டர், மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக் ஆகிய தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.chennaicorporation.gov.in அல்லது gccapp.chennaicorporation.gov.in/cciti/ ஆகிய இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.