மூன்றே நாளில் பாதியாக குறைந்த சென்னை கட்டுப்பாட்டு பகுதிகள் - தற்போதைய நிலவரம் என்ன?
சென்னையில் 200-க்கும் மேல் இருந்த கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 24 ஆகியுள்ளது.
சென்னையில் ஒரு தெருவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த தெரு முழுவதையும் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிக்கும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வந்தது. தற்போது, ஒரு தெருவில் 5 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அந்த பகுதி கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
இதனால் சென்னையில் நாளுக்கு நாள் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. 200க்கும் மேல் இருந்த கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கடந்த ஆகஸ்ட் 1 அன்று 56 ஆக குறைந்தது. இது தற்போது மேலும் குறைந்து 24 ஆக உள்ளது. இந்த கட்டுப்பாட்டு பகுதிகள் 6 மண்டலங்களில் மட்டுமே உள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில், 9 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை எனும் நிலை உருவாகி உள்ளது.
அதிகபட்சமாக அண்ணாநகரில் 11 இடங்களும், கோடம்பாக்கம், அம்பத்தூர் மண்டலங்களில் தலா 5 இடங்களும் உள்ளன. குறைந்த பட்சமாக திருவிக நகர், வளசரவாக்கத்தில் தலா 1 இடம் மட்டுமே உள்ளன.
திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், அடையாறு, ஆலந்தூர், சோழிங்கநல்லூர், பெருங்குடி ஆகிய 9 மண்டலங்களில் ஒரு கட்டுப்பாட்டு பகுதிகள் கூட இல்லை.