சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ, டாக்சி உரிமையாளர்களா நீங்கள்.. உங்களுக்கு மாதம் 15 ஆயிரத்திற்கு குறையில்லாமல் சம்பாதிக்க ஒரு அருமையான வாய்ப்பை ஆவின் வழங்க முடிவு செய்துள்ளது.
ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்க ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இந்த வாய்ப்பு திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.
ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: "தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகாத வண்ணம் முதல்வர் வழிகாட்டுதலின்படி, அவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் ஆவின் பால் மற்றும் உப பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடமாடும் பால் முகவர்
அதன் முதல் கட்டமாக திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமனம் செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஆயிரம் வைப்பு தொகை
நாள்தோறும் தற்போது சுமார் 40 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்பு முகவர்கள் ஆவதற்காக வைப்புத் தொகை ரூ.10,000/- இருந்த நிலையில், தற்போது வைப்புத் தொகை ரூ.1,000/-ஆக ஆவின் நிறுவனம் குறைத்துள்ளதால், 575 புதிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆவின் முகவர்
தமிழகம் முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையைத் தீவிரப்படுத்தும் வகையில் வாழ்வாதாரம் இழந்திருக்கும் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலகங்களில் ரூ.1,000/- பணமாகவோ அல்லது காசோலையாகவோ வைப்புத் தொகையாகச் செலுத்தி உடனடியாக நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமனம் பெற்றுக்கொள்ளலாம்.
ஆவின் தகவல்
சென்னை பெருநகர மாநகரத்திற்கு ஆவின் தலைமை அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் (விற்பனை) அவர்களிடம் வைப்புத் தொகையினைப் பணமாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம்.இதனால் பால் முகவர்களாக மாறும் ஆட்டோ / டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நடமாடும் பால் வண்டி முகவர்களாக மாதம் சுமார் ரூ.15,000/- குறையாமல் வருமானம் கிடைக்க ஆவின் நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. எனவே, இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள அனைவரும் வருக வருக".இவ்வாறு ஆவின் நிர்வாகம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.