கொரோனா ஊரடங்கு காரணமாக வீழ்ச்சியில் இருந்த வெல்லம் விலை, தற்போது உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் லெட்சுமிபுரம், பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் பலரும், கரும்பினை அறுவடை செய்து, வைகை அணை அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்புகின்றனர்.
கரும்பு சாறு எடுக்கும் இயந்திரம்
அதே நேரத்தில், சில விவசாயிகள், தங்களது தோட்டங்களில், கரும்பு சாற்றில் இருந்து வெல்லம் காய்ச்சி, அதனை அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
நம்மிடையே பேசிய விவசாயி ராஜசேகரன், “தேனியில் உற்பத்தி செய்யப்படும் வெல்லம், பெரும்பாலும் கேரளாவிற்குதான் அனுப்பப்படும். கேரளாவில் வெல்லத்தின் தேவையைப் பொறுத்து விலையில் ஏற்ற, இறக்கம் ஏற்படும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 4 மாதங்களாக வெல்லம் தயாரிக்கும் பணியில் கரும்பு விவசாயிகள் யாரும் ஈடுபடவில்லை.
கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் 42 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையின் விலை ரூ. 2,200 விற்ற நிலையில், ஊரடங்கு நேரத்தில் அதன் விலை ரூ. 1,500 ஆக குறைந்தது. இதனால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டதால், கேரளாவில் இருந்து ஆர்டர்கள் வர ஆரம்பித்துள்ளது. தற்போது விலையும், ரூ. 1,800 முதல் ரூ. 2.000 வரை ஏற்றம் கண்டுள்ளது.
வெல்லம் காய்ச்சும் பணி
வரும் ஆகஸ்ட் இறுதியில் கேரளாவில் ஓணம் பண்டிகை ஆரம்பிக்க இருப்பதால், வெல்லம் விலை இன்னும் உயரும் என எதிர்பார்க்கிறோம். அதற்குள், கொரோனா தாக்கம் இல்லாமல் போனால், ஓணம் பண்டிகை எப்போதும் போல சிறப்பாகக் கொண்டாடப்பட்டால், ஒரு மூட்டை வெல்லம் ரூ. 2,500 வரை விலை போகும்” என்றார்.