மாநிலங்களுக்கு கொரோனா நிவாரண நிதி!

35 Views
Editor: 0

கொரோனா நிவாரண நிதியாக ரூ.890.32 கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது..

மாநிலங்களுக்கு கொரோனா நிவாரண நிதி! 

 

கொரோனா நிவாரண நிதியாக ரூ.890.32 கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் மத்திய அரசும் மாநில அரசுகளும் போராடி வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ளதால் மாநில அரசுகளுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசிடமிருந்து நிவாரண நிதியை மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் கோரியிருந்தன. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு நிதியுதவி வழங்கியிருந்தது.

ஏப்ரல் மாதத்தில் முதலாவது தவணையாக ரூ.3000 கோடியை அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருந்தது. மருத்துவப் பரிசோதனை வசதிகளை அதிகரித்தல், மருத்துவமனைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், கண்காணிப்புச் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல், அவசியமான சாதனங்கள், மருந்துகள் மற்றும் இதர பொருட்களை வாங்குவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டது. இதைக் கொண்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5,80,342 தனிமைப்படுத்துதல் படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,36,068 படுக்கைகள், 31,255 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டன.

 

இதையடுத்து தற்போது இரண்டாவது தவணையாக மத்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொரோனா அவசர கால உதவியாக ரூ.890.32 கோடியை விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம், ஆந்திரப் பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா, கோவா, குஜராத், பஞ்சாப், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டையூ & டாமன் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மருத்துவப் பரிசோதனைக்கான பொது சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்துவதற்கு இந்த இரண்டாவது தவணை நிதி செலவிடப்படும். பொது மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்துவது, தேவையான அளவுக்கு அலுவலர்களை நியமனம் செய்து பயிற்சி அளித்தல், திறன் வளர்த்தல், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆஷா திட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோவிட் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவது போன்றவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
 

 

வணிகச் செய்திகள்