கொரோனாவால் பெட்ரோல் விற்பனை சரிவு!

31 Views
Editor: 0

ஜூலை மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது..

கொரோனாவால் பெட்ரோல் விற்பனை சரிவு!

 

ஜூலை மாதத்தில் இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டதோடு பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டன. வாகனப் போக்குவரத்து குறைந்ததால் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனை முடங்கியது. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்கள் மட்டுமே இயங்கின. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊரடங்கு காலத்தில் எரிபொருள் விற்பனை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

எனினும் ஜூன் மாதத்தில் இயல்பு நிலை திரும்பி பெட்ரோல், டீசல் விற்பனை மீண்டும் அதிகரித்தது. இவற்றின் விலையும் உயராமல் இருந்ததால் பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடும் உயர்ந்தது. ஆனால் ஜூலை மாதத்தில் மீண்டும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் பயன்பாடு 15.68 மில்லியன் டன்னாக மட்டுமே இருந்துள்ளது. இது 2019ஆம் ஆண்டின் ஜூலை மாத அளவை விட 11.7 சதவீதம் அதிகமாகும். அதேபோல, ஜூன் மாத அளவை விடவும் 3.5 சதவீதம் குறைவாகும். குறிப்பாக டீசல் விற்பனை ஜூலை மாதத்தில் 5.52 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. ஜூன் மாதத்தில் இதன் அளவு 6.31 மில்லியன் டன்னாக இருந்தது.

 

வருடாந்திர அடிப்படையில் டீசல் விற்பனை 19.3 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஜூலை மாதத்தில் எரிபொருள் பயன்பாடு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் பெட்ரோல் விற்பனை 10.3 சதவீதம் குறைந்து 2.26 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. ஜூன் மாதத்தில் 2.28 மில்லியன் டன் அளவுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்புகள் குறையாத பட்சத்தில் இந்த மாதத்திலும் எரிபொருள் பயன்பாடு வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வணிகச் செய்திகள்